Thursday, May 29, 2008

அன்புத்தோழி...!!!



தோழி,
உன் துயரங்களுக்கு
சமாதி கட்டு
இன்றோடு......
துணிவுடன் புறப்படு.....
தூய அன்பு ஒன்றே அஸ்திரமாக....

இவுலகம் உன் வசப்படும்.....
என எனக்குச் சொன்னவள் என்தோழி....

அன்பை வாரி வழங்குகிறாள் வள்ளலைப் போல....
நானும் அவளிடம் யாசகம் கேட்க காத்திருக்கிறேன் தினமும்....

தோழி..,
உன்னிடம்
நட்பு கொண்ட பின்புதான்
வாழ்க்கையை
ரசிக்க ஆரம்பித்திருக்கிறேன்......
உன்னிடம்
பழகிய பிறகுதான்
பூக்களிடம்
பேச ஆரம்பித்திருக்கிறேன்......

உன் நட்பு
தகரத்தையும் தங்கமாய்
மாற்றும் வகையில்
புடம் போடுகிறது........

என்றென்றும்
நான் உன் தோழியாய்
இருப்பேன் என
ஒற்றைச் சொல்லில்
என் உலகத்தை இயங்க
வைத்த அன்புத்தோழியே...!!!

உனக்கான‌
என் வார்த்தைகளும்......
என் வாழ்த்துகளும்......
தொடர்ந்து கொண்டே இருக்குமடி...!!!

Monday, May 5, 2008

அரசியல் வண்டுகள்..


இந்த அரசியல் வண்டுகள்(தேனீக்கள்..?)
அழகிய மலர்களை காட்டி
தேன் சேகரித்து தருவதாக‌
மக்களை வசீகரிக்கின்றன...

ஏனோ இந்த அப்பாவி மக்கள்
வண்டுகள் காட்டும் அம்மலர்கள்

காகித பூக்கள் என்பதை
உணர்வதே இல்லை...!!!

Friday, May 2, 2008

கவிதையைத் தேடி...



கவிதை எழுத நல்சூழல் தேடி
இளமாலையில் பூங்காவின்
ஒரு மரத்தடியில் அமர்ந்தேன்...

கவிகரு தேடி கண்கள் அலைபாய்ந்தன...

மரத்திலிருந்து மெளன மொழி பேசிக்கொண்டே
உதிரும் பூவரசம் பூக்கள்...

மெல்லமாய் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே
இதழ்களை விரிக்கும் ரோஜா மொட்டு...

தன்னுடன் அன்றவிழ்ந்த மலர்களின் மணத்தையும்
இழுத்துக்கொண்டு உலவும் தென்றல்...

ஏதோ நினைவுகளில் ஆழ்ந்து தன்
வெண்தாடியைத் தடவும் முதியவர்...

பட்டுப்பூச்சிகளாய் ஓடி விளையாடித்
திரியும் மழலைகள்..

கரிய நிழல் அடர்ந்த மரங்களைத்
தேடும் காதலர்கள்...

என்ன எழுதுவதென்றே புரியாமல்
சில நேரம் சிந்தனையில் கழித்து
மெல்ல எழுந்து மெளனமாய் நடக்க ஆரம்பித்தேன்...

-