இவனின் சிறுபருவத்தில்
அவர் காட்டிய அன்பு..
புரியாத வினாக்களுக்கு
அவரளித்த விளக்கம்..
நோயுற்ற நாட்களில்
அவரின் அரவணைப்பு..
பள்ளி பருவத்தில்
அவரின் கண்டிப்பு..
மதிப்பெண் குறைந்ததில்
அவரிடம் பட்ட அடி..
கல்லூரியில் சேர்க்க
அவர் பட்ட கஷ்டம்..
வேலை சிபாரிசுக்கு
அவர் அலைந்த நாட்கள்..
திருமணம் செய்விக்க
அவர் பெற்ற கடன்..
பெரும் கடமையை முடித்ததில்
அவரடைந்த ஆனந்தம்..
பேரபிள்ளைய கொஞ்சுகையில்
அவரின் பரவசம்..
இதோ..
இன்று ஒரு தந்தையின்
கடைமையை இவன் ஆரம்பித்திருக்கிறான்..
தந்தையை காண முதியோரில்லம்
செல்கிறான் மகனோடு..
சுருக்கம் விழுந்த முகத்தில்
வேதனை ரேகைகள் ஓடுகின்றன..
ஆனந்தமாய் அரைமணி நேரம் கழித்து
விடை பெறுகையில் சொன்னார்..
மகனே..
ஒரு கடமை மிஞ்சியிருக்கிறது..
உனக்கு கொடுக்க வேண்டிய
பொருள் ஒன்று இருக்கிறது..
இந்த கைத்தடியை வைத்துக்கொள்
பிற்காலத்தில் உதவுமென்றார்..
கண்களில் அருவி வழிய
தந்தையின் அன்பை உணர்கிறான்
இவன் இப்பொழுது...
ஒன்றும் புரியாத பேரனோ
இருவரையும் மாறி மாறி பார்க்கிறான்...
Thursday, April 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment